Thursday 22 September 2016

கையெழுத்து

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து என் அண்ணனுங்க என் கூட சண்டையே போட்டதில்ல. எனக்கு எதனா ஒரு சின்ன பிரச்னைனாலும் என் பெரிய அண்ணன் தான் மொதல்ல வந்து நிப்பான். நான் அழறதுக்கு முன்னாடியே காரணத்த கண்டுபுடிச்சி என்ன அழாம பாத்துப்பான். அதனாலயோ என்னவோ அப்பாவ விட அண்ணன் தான் எனக்கு உசுரு. அப்பா எலெக்ட்ரிசிட்டி போர்டு ல சீப் என்ஜினீயர் (பிளானிங்). அண்ணா சாலை ல ஆபீஸ். ரொம்ப ஸ்ட்ரெயிட் பாவர்ட். வீட்லயும் கொஞ்சம் கரார்தான். ஆனா நான் பக்கத்துல இருந்தா அப்டியே அவரு கொழந்தையா மாறீடுவார். 

பெரிய அண்ணன் தியாகு எல்.என்.டி. ல  இன்ஜினீயர். ரெண்டாவது அண்ணன் லோகு இன்ஜினீயரிங் ஒழுங்கா நாலு வருஷத்துல முடிக்காம அரியர்ஸ் வெச்சி, இப்ப கடேசியா எப்படியோ முடிச்சிட்டு வேல ஏதும் கெடைக்காம எம்.ஈ. சேந்துருக்கான். நான் ரம்யா. பி. ஈ. முடிச்சிட்டேன். கேம்பஸ்ல ப்லேஸ் ஆனேன். ஆனா பெங்களூர்ல வேலன்னால அப்பா வேணாம்னு சொல்லீட்டாரு. ஆனாலும் நான் விடாம வேல தேடீட்டே இருக்கேன். அழகான கனவு போல ஒரு வாழ்க்கை. 

எல்லாமே சுகமாதான் இருந்துச்சு அன்னைக்கு வரைக்கும். அப்பா எறந்து நான் ஒரேடியா அனாதையான நாள் அது. சாவுக்கு வந்திருந்த அம்மாவோட தம்பி சொல்லிதான் என்ன அவரு எடுத்து வளத்த விஷயமே தெரியும். அன்னைக்கு வரைக்கும் ரொம்ப உரிமையா இருந்த வீட்ல அழுது அழுது தொண்ட வறண்டு போனப்ப, ஒரு முழுங்கு தண்ணி குடிக்கற உரிமை இருக்கானு யோசிச்சு தவிச்ச நாள் அது. அப்பா எறந்த அதிர்ச்சிலதான் அம்மா சரியா பேசலன்னு மொதல்ல நெனச்சேன். ஒரு ரெண்டுவாரம் போன பெறகுதான் என்ன எடுத்து வளக்க முட்டுக்கட்டையா மொதல்ல இருந்ததே அவங்கதான்னு எங்க வீட்ல இருவத்தேழு வருஷமா வேல செய்ற பவுனு பாட்டி சொன்னாங்க. ரெண்டர வயசாம் என்ன மொதமொதல்ல ஹோம்ல இருந்து எடுத்துட்டு வரும்போது. இருவது வருஷம் கழிச்சு இப்டி ஒரு நாள் வரும்னு நான் ஒரு நாளும் நெனச்சதில்ல. 

ஒரு மனுஷனோட சாவு ஒரு குடும்பத்தயே என்கிட்ட இருந்து பறிக்கும்னு நெனைக்கல. அந்த குடும்பத்த குடுத்ததே அவருதான. அவரே எடுத்துட்டு போய்ட்டார். அழுதே ஒரு மாசம் ஓடீருச்சி. அம்மாதான் பேசலனா, அண்ணனுங்க கூட ஏதும் கண்டுக்கல. ஏதாச்சம் நானே வலுக்கட்டாயமா கேட்டா கூட பொத்தாம் பொதுவா ஒரு பதில். அவனால இந்த அளவு வெறுப்ப கக்க முடியும்னு அப்பதான் தெரிஞ்சது. எல்லாத்துக்கும் மேல இன்னொரு இடி வந்துச்சு. நாங்க இருந்த அண்ணாநகர் வீட்டயும், ஒரகடத்துல ரெண்டு கிரவுண்ட் நெலத்தயும் அப்பா என் பேர்ல எழுதீருக்கறார். வெறும் அதிர்வு பூகம்பமா மாருச்சு. 

அன்னைக்கு நான் மௌனத்த கலச்சு ரெண்டு வார்த்த பேசனேன். எனக்கு வேல கெடச்ச விஷயத்தையும், சீக்கிரமே ஒரு லேடீஸ் ஹாஸ்டல் பாத்துட்டு கெலம்பறதயும், ஒரு நாள் பாத்து பேப்பர்ஸ் ரெடினா, நீட்ன எடத்துல கையெழுத்து போடறன்னும் சொன்னேன். என் தாய்மாமன் மொகத்துல சந்தோசத்தயும், அண்ணனுங்க மொகத்துல இருந்த கலவரம் மறஞ்சதயும் பாத்தேன். அம்மாவோட மௌனத்த என் வார்த்தைகளுக்கு சம்மதம்னு நானா எடுத்துகிட்டேன். 

வேடந்தாங்கல்ல இருந்து கூண்டுக்குள்ள வந்த மாதிரி இருந்துச்சு, அந்த ரெண்டு நாள் லேடீஸ்  ஹாஸ்டல் வாழ்க்கை. ஒரு புதன் கெழம, ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வர சொல்லீருந்தாங்க. நெறய பேப்பர்ல கையெழுத்து போட வேண்டிருந்துச்சு. ஒத்திக கூட பாக்காம வந்துட்டேன். 


எனக்கு ஆறு வயசு இருக்கும்போது அவன் டூர் செலவுக்கு குடுத்த காசுல எனக்கு மட்டும் வாங்கீட்டு வந்திருந்த டெட்டி பியர்காகவும், எல்லாரும் சாப்டு கடைசியா இருந்த ஸ்வீட்ட எனக்கு எத்தனயோதடவ விட்டுக் குடுத்ததுக்காகவும், என் முனுமுனுப்ப சங்கீதம்னு நெனச்சி என்ன மியூசிக் கிளாஸ் சேத்துவிட்டதுக்கும், எப்பவுமே நடக்கற ரிமோட் சண்டைல கடேசியா எனக்கு புடிச்ச கார்ட்டூன் சேனல் அவன் கிரிக்கெட்டுக்கு பதிலா பாத்ததுக்கும், எனக்கு புடிக்காத பயாலஜி குரூப் வேணாம்னு அப்பாகிட்ட சண்டபோட்டதுக்கும், எல்லாத்துக்கும் மேல நான் மொதல்ல அண்ணானு பேச ஆரம்பிக்கும்போது சொல்லு குட்டிமானு அண்ணன் ஒறவுனா எப்டி இருக்குனு யாரும் இல்லாத எனக்கு புரிய வெச்சதுக்காவும், நான் அவனுக்கு செய்ற ஒரே விஷயம் என் கையெழுத்து. எத்தனையோ தடவ அப்பா கையெழுத்த எனக்காக அவன் ரேங்கார்ட்ல போட்டுருக்கான். இன்னைக்கு ஒரே ஒரு தடவ அப்பாகாக அவனுக்கு என் கையெழுத்த போட்டுக் குடுத்தன் சந்தோஷமா..




5 comments:

  1. ஏன் இந்த சோகம்.... ஹேப்பியான எழுதுங்க....ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. சோகமும் கலந்தது தான வாழ்க்கை... இந்த கதைய எழுதும் போது ஏதோ ஒரு அமைதி மனசுல இருந்துச்சு...

      Delete
  2. நெகிழ்ச்சி

    ReplyDelete
  3. Good story மனதை நெகிழ வைக்கும் அற்புதமான கதை.....

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...