Monday 26 November 2018

அசுர அமைதி

கூட்ட நெரிசல்களிலிருந்தும்
இரைச்சல்களிலிருந்தும்
வழக்குகளிலிருந்தும்
வாதங்களிலிருந்தும்

கால்கள் ஓடத்துடிக்கும்
அந்தப் பேரமைதி
நிலப்பரப்பை அடைய

ஒரு கோப்பை மதுவோ
ஒரு புத்தகமோ
பார்த்துப் பிடித்த படமோ
பழகிய பாடல் வரிசையா
திக்குத் தெரியாமல்
செல்லும் நீள் பாதையோ
தேவையில்லை.

என்றும் முடிவுறா
வார்தைப் போர்களில்
கூர் வார்த்தைகள்
நெஞ்சை ரணமாக்கும்

ஒன்று
அசுரனாகலாம்
இல்லை
அமைதி காக்கலாம்

அசுரனாகிட வெறும்
ஆயுதங்கள் போதும்
அமைதி காக்கவே
நெஞ்சில்
அசுரபலம் வேண்டும்

Thursday 26 July 2018

உயிர் கொடுங்கள்

பூமிவந்த
புத்துயிரொன்று
சுவாசிக்க
சிரமப்படுகிறது
இரும்பாலையின்
சப்தத்தில் அதன்
பிஞ்சு காது மடல்கள்
பழுதடைகின்றன
கரிவளியை
கக்கியபடியே
பராமரிப்பற்ற
அரசு பேருந்து
கடக்கையில்
அது மேலும்
மூச்சிற்கு திணறுகிறது
ஆலையை மூட
நடக்கும் சாலை மறியலில்
எரியும் டயரின் புகை
பிஞ்சு நுரையீரலை
நஞ்சாக்குகிறது
வனங்களை அழித்து
வாகனங்களுக்கு
ராஜபாட்டையிடும்
ஒப்பந்தம் ஒன்றும்
கையெழுத்தானது
இரண்டு மூன்று
நான்கென
எந்திர சக்கரங்களில்
விரைந்தோடியதில்
கரப்பனின் இடுக்கிலும்
கரும்புகையே மிச்சம்
அச்சோ
மூச்சுத்திணறலின்
வேகம் கூடுகிறது
குழந்தை
உயிர்த்திருக்க
துடிக்கிறது
யாரேனும்
உயிர் கொடுங்கள்
மரம் ஒன்றை
வளர்த்து

Wednesday 18 July 2018

கிணற்றில் கிடந்தது போதும்

பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுத்தது
திருக்குறளில் ஒரு சில அதிகாரங்களையே.
வள்ளுவன் எழுதியதும் வெறும் 133 தான்.
வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் அதற்க்கும் மேல்.
கைநாட்டு பாட்டனுக்கு கையெழுத்து போடும் அப்பன் ஆனந்தம்.
கையெழுத்து அப்பனுக்கோ பட்டம் பெற்ற மகன் பேரானந்தம். ஆனால் அவன் பெற்றவனோ இரண்டு பட்டங்களுடன் மூன்று ஆண்டுகளாய் வேலைத் தேடி.
அன்றைய எஸ்.எஸ்.எல்.சியின் அறிவைக்கூடவா இன்றைய முதுகலைப் பட்டதாரி பெறவில்லை.
ஆண்டுகள் வளர திறமைகள் தேய்ந்தா போயின? எல்லாம் கற்க முனைந்து வழியில் முக்கியமானதெதையோ கற்க மறந்தோம்.
பொறியியல் படிப்பு வெளிநாட்டு விசாவையும், கிரீன் கார்டையும் பெற்றுத்தருமென சீட்டுக் கம்பேனியில் பணம் போட்டு ஏமார்ந்தோர் போல்
பொறியியல் பொறியில் ஆயிரக் கணக்கான எலிகள்.
அறியாமை என்று யாரைச் சுட்டுவது?
ஆய் அப்பனையா? ஆசானையா?
அனைத்தையும் பார்த்து உண்மை என நம்பி
நாமே ஏமார்ந்ததால் நம்மையேவா.
படிப்பிற்க்கும் பணிக்குமான சம்பந்தம்
என்றோ எங்கோ துண்டிக்கப்பட்டது தெரியாமல் அனைவரும், அனைவருமே அப்பயணத்தை மேற்கொண்டு, உண்மை உணரும் போது திரும்பவியலா தூரம் வாழ்வில்.
படிக்கும் போதே வேலையென
நம்பிக் கொண்டுதானே சிலர் சேர்கிறார்கள்.
பக்கத்து வீட்டு அண்ணன் பகரின் சென்றானே என அவன் வழி செல்லாதீர்
எதிர் வீட்டு அக்கா அமெரிக்காவில் உள்ளதால் அவள் பாதை நம்மையும் அமெரிக்கா எடுத்துச் செல்லுமென உறுதியில்லை.
என்னவாகப் போகிறோமென்ற தேடல் நமக்கு வெளியே, நம்மைச் சுற்றி இருப்பதை விட,
அதிகமாய் நமக்குள் இருக்க வேண்டும்.
என் நாட்டம் எங்கு இருக்கிறது
என் இதயம் எதில் துடிக்கிறது
என் கனவு எத்திசையில் உள்ளது.
அதைத் தேட வேண்டும்.
அதன் பின் ஓட வேண்டும்.
பாதைகள் கடினமான இருக்கலாம்.
கரடுமுரடாக, காட்டு வழியாக, அரவங்கள் நிறைந்து அபாயங்களுடன் இருக்கலாம்.
கல் தடுக்கி கால் இடறுமிடத்தில் பெரிய பள்ளத்தாக்கு இருக்கலாம்.
சீறும் அலைகளுடன் கொந்தளிக்கும் ஆழி இருக்கலாம்.
காடு மலைகள் தாண்டி வெற்றிக் கோடு
எங்கோ தூர தேசத்தில் இருக்கலாம்.
ஆயத்தமாவோம். அப்பாதை நடக்க.
உண்மையில் வெற்றி என வரையறுக்கப்பட்ட ஒன்று ஏதுமில்லை. அது ஒரு மன நிலையே.
நம் வெற்றி மகுடத்தை யாரும் தயார் செய்வதில்லை. அது சுயமாக நாமே எடுத்துக்கொள்வது. நமக்கு நாமே சூடிக்கொள்ளும் மணிமகுடம்.
நம் சந்தோஷத்தில், நிம்மதியான உறக்கத்தில், உள்ளத்தின் பூரிப்பில், ஆர்ப்பரிப்பில், மனதின் கொண்டாட்டத்தில் தான் உள்ளது உண்மையான வெற்றி.
கிணற்றில் கிடந்தது போதும். புறப்படுவோம் கடல் நோக்கி ஒரு பயணம்.

Tuesday 3 July 2018

சொல்

உறைபனியின் நடுக்கத்தை
எரிமலையின் உஷ்ணத்தை
பூகம்பத் தாக்கத்தை
பெரும்புயலின் சீற்றத்தைத்
தரவல்லது தான் வாய்
தவறும் ஒரு சொல்.

கால்தடம்

யானைகள் கடந்த
பாதையில்
யானைகளின் கால்தடம்
வேங்கை பாய்ந்த
இடங்களில்
வேங்கையின் கால்தடம்
முயல்கள் துள்ளிய
வனத்தில்
முயல்களின் கால்தடம்
சிறுத்தை ஓநாய்
சிறுநரி சர்பம்
எனபல தடங்கள்
ஆறறிவு மந்தைகள்
அடர்வனத்தில்
எங்கேயோ

நேரடியாக பாதிக்கப்பட்டவன்

மெஸ்ஸியை தெரியாதிருப்பது
தேச துரோகமில்லை
நெய்மாரின் சாதனைகளை
அறியாததும் பெரிய குற்றமில்லை
பிரேசிலின் வெற்றியை
முகநூலில் பகிராவிடின்
மார்க் நம்மை
தள்ளி வைக்கப்போவதில்லை
அர்ஜென்டினாவின் தோல்வி
நெஞ்சில் பாரத்தையோ
போர்சுகலின் வெளியேற்றம்
கண்களில் ஈரத்தையோ
தராமல் இருந்தாலும்
கேடில்லை நலமே.
பல கோடி மக்கள்
கொண்டாடும் திருவிழாவை
ஒரு சிலர்
புரிந்துகொள்ளாதிருப்பது பாவமில்லை
அட பிரேசிலோ பர்மாவோ
உருகுவேவோ உகாண்டாவோ
கால்பந்து கோப்பையை
கையிலேந்தி நெஞ்சில் சுமக்கட்டும்
நம் இயல்பு வாழ்க்கை
அதனால் மாறப்போவதில்லை

-- நேரடியாக பாதிக்கப்பட்டவன்


பட்டாம்பூச்சி

கல்லறைத்தோட்டத்தில்
சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள்
புதைத்த உடல்கள் தான்
உயிர்த்துத்
திரிகிறதோ



*****************


வனக் காவல்
நிலையத்தின்
கயவர் பட்டியலில்
வடை களவாடிய 
காக்கை
அதை ஏமாற்றிய
நரியுடன்
அப்பம் பங்கிட்ட
குரங்கும்.



********************

பசுந்தழையோ
பசை தடவிய தாளோ
பசு செறித்து
தருவதென்னவோ
பால் மட்டுமே



*******************

நேரத்தே வீடு
திரும்பவியலா
காரணத்தினாலோ
வீட்டையும் சுமந்தே
ஊர்கிறது நத்தை.



******************


பசித்த
எறும்பின்
பயணம்
கரும்புத்
தோட்டத்தை
அடைந்தும்
முடியவில்லை



*********************

வழி தவறிய தேனீ
தேடித் திரிந்து
அலைந்து அலுத்து
இறுதியாய்
ஓர் மலரில் 
வந்தமர்ந்ததும்
வெடி முழங்க
பறை கிழிய
கிழவனின் சடலம்
புறப்பட்டது.

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...