Wednesday 26 October 2016

யாழினி

ஓயாம அழுதுட்டே இருந்தா யாழினி. அவ அழுகைய நிறுத்த படாத பாடு பட்டான் பிரபாகரன். சாக்லேட், ஐஸ் கிரீம், எத குடுத்தாலும் அவ வாய மூடறதா இல்ல. அந்த டெட்டி பியரும், பார்பி டால்லும் இந்த ஆங்கிரி பேர்ட்ட அமைதியாக்கர முயற்சில தோத்து போச்சு. எந்த விளையாட்டு பொருளானாலும் ரெண்டு நிமிஷம் தான் அப்பறம் அவளோட கச்சேரி ஆரம்பமாயிடும்.

அன்னைக்கு காலைல இருந்து எல்லாமே அமைதியாதான் இருந்துச்சு. வழக்கத்துக்கு மாறா யாழினி கேட்டது எல்லாமே அவளுக்கு தாராளமாவே கெடச்சுது. வழக்கமா ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு ரெண்டாவது வேணும்னு வாய தொறந்தா அவ அம்மா வாய் மேலயே போடுவா. ஆனா அவ இல்லாதது ரொம்ப நல்லதா போச்சு. வயிறு நெறையற அளவுக்கு ஐஸ் கிரீம்.

அவ எப்ப கத சொல்ல ஆரமிச்சாலும் வாய மூடு. அமைதியா டிவி பாருனு ஒரு பதில் தான் கேட்டுருக்கா. இன்னைக்கோ இவ வாய் ஒயரவரைக்கும் கத கேட்டுட்டு இருந்தான் நம்மாளு. அவளுக்கே அது கனவா நெஜமானு கிள்ளி பாத்துக்கற அளவுக்கு நடந்த ஒரு எட்டாவது அதிசயம். அவ பிரென்ட் நான்சி வீட்டு நாய்க்குட்டி ஜூஜூல ஆரமிச்சு, ரீனா மிஸ், வாட்ச்மேன் தாத்தா, சோட்டா பீம் கதைல நேத்து நடந்தது, பேஸ்ட்ல புடிச்ச டேஸ்ட், கிஷோர் வீட்ல அவன் வளக்கற டைனோசர், லான்ல பொதச்சு வெச்ச பல்லு, சாக்லேட்ட விட டேஸ்ட்டா இருக்கற சாக்பீஸ்னு சீசன்ல கொட்டற குத்தால அருவி மாதிரி அவ பேசீட்டே இருந்தா...

பிரபாகர் சுயதொழில் செய்றான். சுயதொழில்னு சொன்னாலே நிரந்தர வருமானம் இல்லனு அர்த்தம். கெடச்சா பிரியாணி இல்லைனா ஈரத்துணிங்கற நெலம தான். ஆனா அவன் பிரச்சனையெல்லாம் தீரரமாதிரி இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். ரொம்ப நாள் யோசிச்சு அவன் செஞ்ச ஒரு வேலையோட முழு பலனே இன்னைக்கு மீட்டிங்ல தான் இருக்கு. ராஜேஷ் ரங்கராஜன். கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்ல கொஞ்சம் பிரபலம். அவரோட தான் இன்னைக்கு மீட்டிங். டைம், வெனியூ, ஏற்கனவே பிக்ஸ் பன்னியாச்சு. அதுக்கு கிளம்பும் போது தான் இவளோட கதையெல்லாம்.

அவ பிசியா செவுத்துல ஏதோ ஓவியம் தீத்தீட்டே இருந்தப்ப அவன் கெளம்பீட்டே இருந்தான். ஒரு வீடு வரைஞ்சிருந்தா. பக்கத்துல ஒரு மரம். கீழ ரெண்டு ஜீவன். குருவியா, கோழியானு தெரியல. அதுக்கு பக்கத்துல பூச்செடிங்க. எல்லாத்தையும் முடிச்சிட்டு பாத்தா. கொஞ்சம் எக்கி வீட்டுக்கு மேல ஒயரத்துல இவளால தொட முடியற அதிகபட்ச ஒயரத்துல ஒரு வட்டம் வரைஞ்சா. ஒரு அஞ்சாறு கோடு இழுத்துட்டே இருந்தா. சூரியன் முழுமையடையறதுக்குள்ள எதையோ யோசிச்சவ, "இன்னைக்கு என்ன டே?" பிரபாகர பாத்து கேட்டா. இன்னைக்கு சாட்டர்டே மா இவன் சொல்ல. ஓவிய பணிய பாதில விட்டுட்டு அவ ஓன்னு அழ ஆரமிச்சிட்டா.

மன்னாதி மன்னன் கூட மண்ணை கவ்வன எடம் குழந்தை வளர்ப்பு. அகராதிலயே அடம்ங்கற வார்த்தைக்கு அர்த்தம் நிச்சயம் யாழு குட்டின்னு தான் போட்ருப்பாங்க. டிவில வர கார்ட்டூன், ஐபோன்ல இருக்கற கேம் எதுமே செல்லமா போக, மீட்டிங்கு வேற நேரம் ஆகுது, இவ இப்டி அழுதுட்டு இருந்தா எப்படி போறதுன்னு யோசிச்சான்.

சாட்டர்டேனு சொன்னதுக்கு ஏன் அழறானு தெரியல. ஒரு கால் மணி நேரத்துக்கு அப்பறம், சாட்டர்டே மூவீக்கு போயிட்டு அப்டியே தீபாவளிக்கு புது டிரஸ் எடுக்கலாம்னு மம்மி சொன்னாங்கனு சொல்லீட்டு மறுபடியும் அழ ஆரமிச்சிட்டா. சமாதான படுத்த வழியே இருக்கற மாதிரி தெரியல. கொஞ்சம் யோசிச்சு பாத்துட்டு, சரிம்மா அழாத. நானே உன்ன மூவி கூட்டிட்டு போறன். அப்பறம் டிரஸ் எடுக்கலாம். நீ அழக்கூடாதுனு சொன்னான். அதுக்கு பிறகு தான் அவ அமைதியானா. இந்த மீட்டிங்க என்ன செய்றதுனு யோசிச்சவன் அவருக்கு கால் பன்னி "சார். பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச். ஈவினிங் ஒரு அஞ்சு மணிக்கு ஃபீனிக்ஸ் மால்கு வந்துருங்க. அங்கேயே நாம மீட் பன்னலாம்" னு சொல்ல, அவரும் சரினு சொல்லீட்டாரு.

இவள கூட்டிட்டு படத்துக்கு போனான். அனிமேஷன் படம். காலைல கதறி அழுதவ வேற ஒருத்தியோன்னு நெனைக்கற அளவுக்கு ஒரே சிரிப்பு சத்தம். படம் முடியற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல ரிங் டோன் மாதிரி இருந்துச்சு அவ சிரிப்பு. படம் முடிஞ்சி ரெண்டு பேரும் புட் கோர்ட்ல. கங்காரு மாதிரி இவளை சுமந்துட்டே எல்லா கவுண்டரையும் நோட்டம் விட்டான். அவ நூடுல்ஸ் வேணும்னு சொல்ல, அதையே வாங்கனான்.

அடுத்து ஷாப்பிங். அவ அமைதியா கடைக்குள்ள இருந்தா. வழக்கமா இவ எதனா எடுத்தா, அவளோட அம்மா இதெல்லாம் வேணாம் நானே எடுத்து தரேன். உனக்கு எது வேணும்னு மம்மிக்கு தெரியும்னு அவ இஷ்டத்துக்கு தான் எடுத்து குடுப்பா. ஆனா மொதமொறயா உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோன்னு இவன் சொன்னதும் அவளுக்கு எதுமே புரியல. ஹெட் மாஸ்டர பாத்த ஸ்டூடெண்ட்டாட்டம் அமைதியா இருந்தா. அப்பறமா அவனே சிலதை எடுத்து இது புடிச்சிருக்கா? இது எப்படி இருக்கு? இதுல எது புடிச்சிருக்குன்னுலாம் கேட்டான். ஒன்னே ஒன்னு போதும் இருந்தவ இப்ப அஞ்சு டிரஸ் எடுத்துட்டா. சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கா.
அடுத்து அங்கேயே ஒரு ஐஸ் கிரீம் டப் வாங்கி குடுத்தான்.

அப்ப அவனுக்கு ஒரு கால் வந்துச்சு. ராஜேஷ் பார்க்கிங்ல இருக்கறதா சொன்னாரு. இவன் அவர மேல காபி ஷாப்கு வர சொன்னான். இவ பக்கத்துல அந்த டிரஸ் எல்லாமே வெச்சிட்டு, இவ கிட்ட ஒரு சின்ன வேல இருக்கு நீ ஐஸ் கிரீம் சாப்டுட்டே இரு, ஒரு டென் மினிட்ஸ்ல நான் வந்துர்ரன். எங்கயும் போக கூடாது. இங்கயே இருனு சொன்னான். இங்கயே இருக்கறதா அவளும் தலையாட்டி டாட்டா சொல்லி சிரிச்சா.

ராஜேஷ் கைல ஒரு லெதர் பேக் எடுத்துட்டு அவன மீட் பன்ன வந்தாரு. எதிர்லயே அவன் கண்ணு பாக்கற எடத்துலயே தான் யாழினி இருந்தா. குட்டி தேவதை. சுத்தி நடக்கற எதையுமே கவனிக்காம ஐஸ் டப்ல மூழ்கீருந்தா. ராஜேஷ் வந்து அவன் கிட்ட பேசன ரெண்டு நிமிஷத்துலயே நாலு தடவ அவள இருக்காளான்னு பாத்தான். பேசி முடிச்சதும் அந்த லெதர் பேக்க எடுத்துட்டு அதுக்குள்ளயே ஒரு தடவ எதையோ சரிபாத்துட்டு பிரபாகர் கிளம்பீட்டான்.

சாப்டுட்டே இருந்த யாழினி நிமிந்து பாத்தா ராஜேஷ் நின்னுட்டு இருந்தாரு. வாமா போகலாம்னு அவள அவர் தூக்க. அவ வரமாட்டேன்னு அழுதா. பக்கத்துல இருக்கவங்களாம் ஒரு மாதிரி பாக்க, யாழினி ஏன் பிரச்னை பன்ற? டாடி கூட வானு ராஜேஷ் அதட்டி கூப்பிட, இல்ல வரமாட்டேன். நான் அங்கிள் கூடவே இருக்கேன். எனக்கு நீ வேணாம். நீ ஆபீஸ்லயே இரு. எனக்கு உன்ன புடிக்கல. ஏன் இங்க வந்த? நான் உன் கூட வரலனு அழ ஆரமிச்சிட்டா.

ஐ ஆம் யுவர் பாதர் டாமிட். அவன் குரல உயர்த்த. நீ என் கூட பேசல. ஸ்டோரி சொல்லல. நான் பேசறதை எதுவும் கேட்கல. ஸ்கூல்ல ட்ராப் பன்னல, ஷாப்பிங் கூட்டிட்டு போல. ஹோம் வர்க் செஞ்சி குடுக்கல. உன் லேப்டாப்ல கேம் விளையாட குடுக்கல. ஐ போன் பாஸ்வோர்ட் சொல்லல. நான்சி, கிஷோர், ரம்யாவோட பாதர் செய்றது எதுமே நீ செய்யல. அப்பறம் எப்படி நீ என் பாதர்?

அந்த அங்கிள் எங்க? அவரு வேணும். அங்கிள்.. அங்கிள்... என்ன விட்டுட்டு எங்க போனீங்க? யாழினியோட கலங்கன கண்ணுங்க பிரபாகரனை அந்த கூட்டத்துல தேடுச்சு. இருவத்தஞ்சி லட்சம் டீல் முடிச்சு, பிரபாகர் லெதர் பேக்கோட போகும்போது அவளோட அழுக சத்தம் மட்டும் காதுல கேட்டுட்டே இருக்க, பாலன்ஸ் ஷீட்டையே பாத்துட்டு பர்சனல் லைப்ல பாலன்ஸ் இல்லாம பாதாளத்துல விழுந்திருக்கறத மொதமுறையா உணர்ந்தான் ராஜேஷ்.



Monday 24 October 2016

வேட்டை

"ஒன்னு நான் சொல்றத செய்... இல்லனா வேற வேல தேடிக்க" மெரட்டீட்டு கைப்பேசியை  துண்டிச்சான் அவன். தூண்டில போட்டாச்சு எப்படியும் மீன் வந்து மாட்டும்னு நெனச்சிட்டே அந்த பீர் பாட்டில வாயிலேயே கடிச்சு தொறந்து ரெண்டு சிப் குடிச்சான். அப்ப வீட்டு காலிங் பெல் அடிச்சுது. சரக்கு பாட்டிலை தொறந்தாலே மோப்பம் புடிச்சிட்டு அழையா விருந்தாளிங்க பங்குக்கு வந்துருவாங்களேனு நெனச்சிக்கிட்டே  கதவ தொறந்தா, அவன் ஆடர் பன்ன சாப்பாடு பார்சல் வெச்சிட்டு ஒரு பைய்யன் நின்னுட்டு இருந்தான். சாப்பாடுக்கான காச வாங்கீட்டு, டெலிவரி பாய்க்கே உரிய அசட்டு சிரிப்போட "தேங்யூ சார் ஹாப்பி டைனிங்"னு சொல்லீட்டு போனான். சைடு டிஷ்ஷும் அவன் கொண்டு வந்து குடுத்தது, செம டைமிங்

டைனிங் டேபிள்ல அத வெச்சிட்டு அப்டியே டிவிய ஆன் பன்னா, புலி வேட்டைக்கு போறத பத்தி சொல்லீட்டு இருந்தாங்க. அத பாத்துட்டே சாப்பிட ஒக்காந்தான். ஒரு பத்தடி தூரத்துல மேஞ்சிட்டு இருக்கற மான புடிக்க ஒரு புலி பதுங்கி இருந்துச்சு. மான் எப்படியும் மாட்டீரும்னு ஆர்வமா பாத்துட்டே இருந்தான். அப்ப கைப்பேசில ஒரு குறுஞ்செய்தி. "மன்னிச்சிருங்க. என் புருஷனுக்கு என்னால துரோகம் செய்ய முடியாது"னு அவ அனுப்பியிருந்தா. "உனக்கு வேற வழி இல்ல. நல்ல முடிவா எடு" பதில் அனுப்பீட்டு அவன் சிக்கென கடிச்சான். நேரம் பாத்து சரியா புலி பாஞ்சிது. துளியும் அத எதிர்பார்த்திராத அந்த மானோட பின்னங் கால் புலியோட வாயில. அது முன்னங் கால்களால அப்டியே மானோட வயிற்று பகுதியை அழுத்தி புடிச்சிருச்சு. துடிதுடிச்ச மான் உயிருக்காக எவ்ளோவோ போராடுச்சு. ஒரு கட்டத்துல புலி மானோட கழுத்த நல்லா கவ்வீறுச்சு. மான் உயிரை விடற வரைக்கும் புலி மான விடல. இதை ரொம்ப ரசிச்சு பாத்தான். பீரும் காலி, தட்டுல இருந்த சோறும் காலி

சாப்டு முடிக்கும்போதுதான் அந்த கவர்ல ஒரு துண்டு சீட்டு இருந்தத கவனிச்சான். அது என்னனு பாக்க எடுக்கும்போதே தலை சுத்தி சேர்ல இருந்து சரிஞ்சி கீழ விழுந்துட்டான்.  சும்மா ரெண்டு பீருக்கு போய் போதை ஆகற ஆல் கெடயாது. வேற ஏதோ நடந்திருக்கு. ஆனா என்னனு தெரியல கண்ணுலாம் மங்கீருச்சி. மூச்சு விட முடியல. மொகமெல்லாம் வியர்வை. மூக்குல ஏதோ வடியறத உணர்ந்து, என்னனு தொட்டு பாத்தா செவப்பா இருந்துச்சு. ரத்தம்.. மொபைல் அவன்  கைக்கு எட்டற தூரத்துல இல்ல. வயித்து மேலயும் தொண்டை மேலயும் நாலு பேரு நிக்கற அளவுக்கு ஒரு பாரம். அதுல இருந்து அவனால மீண்டு வர முடியல. தரைல போட்ட மீன் மாதிரி ஒரு பத்து நிமிஷம் துடிச்சான்

அது எல்லாத்துக்கும் நடுல பல முகங்கள் நிழலாடுச்சு. பல கதறல்கள் அவன் காதுல ஒலிச்சிது. அந்த துண்டு சீட்டுல இருந்த வரிகள் வேற மறுபடியும் கண்ணுக்குள்ள ஒரு ஓவியம் மாதிரி வந்து போச்சு. ரொம்ப பழக்கப் பட்ட ஒரு கையெழுத்து. ஓவியம் வரைஞ்சு வெச்ச மாதிரி ஒரு கையெழுத்து. ஏதோ அழகான விரல்களுக்கு சொந்தமான கையெழுத்தா தான் இருக்கணும். ஆனா யாரு, எந்த ஊரு, எதுமே தெரியல. அவன் தலையெழுத்து முடியற நேரத்துல அவன் பாத்த ரெண்டு வரிகள் "ஹாப்பி லாஸ்ட் டின்னர். குட் பை பார்எவர்"


உயிர்ப்பு

நெடுஞ்சாலையில் குருதி வெள்ளத்தில் கிடந்த மதனை, விரைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். நேரம் கழிந்தது. மதனின் இதயம் சீராய்த் துடித்தது முஸ்தபா உடலில்.

Tuesday 18 October 2016

சாரல்

இன்றைய பெருமழை நினைவுபடுத்திய சிறு வயது சாரல்...


இதயத் துடிப்பு

நவீனமும் மனிதாபிமானமும் இனைந்து பிரசவிக்கும் உயிரைப் பற்றிய சிறு பதிவு...


Monday 10 October 2016

அண்ணாச்சிக்கு என்னாச்சி?



மளிகை கடை
அண்ணாச்சி
சிரிச்சு பல
நாளாச்சி

மூனு வருஷம்
முன்னால
கல்லா ரொம்பும்
தன்னால

குடும்ப அட்டை
உள்ளவரும்
அரிசி பருப்பு
வாங்கிவர

வேல செய்யவே
நேரமில்ல
வந்த லட்சுமி
கொஞ்சமில்ல

மூத்த பைய்யன்
படிப்புக்கு
கூட்டு மதிப்பெண்
கம்மியினு

கல்லால இருந்து
காசெடுத்து
கல்லூரி எல்லாம்
சேத்தாரு

மூனாம் வருஷம்
காசு கட்ட
கையில ஏதும்
இல்லாம

வீட்டம்மா சரட
எடுத்து 
அடகு கடைல
வெச்சாரு

சரக்கு எடுத்து
நாளாச்சி
கடையும் நொடிஞ்சி
பாழாச்சி

கடை ஒடிஞ்ச
கததெரிய
போகனும் கொஞ்சம்
பின்னால

சின்ன ஊரு
அதுக்குள்ள
குட்டி கடைங்க
நடுவுல

பளிங்கு கண்ணாடி
கதவு வெச்சி
பலசரக்கு கடை 
தொறக்குது

குளுகுளுனு
வசதியா
வந்தவன் ஆகல
அசதியா

அரிசி பருப்பு
அத்தனையும்
அழகழகா
அடுக்கிவெச்சி

வாங்கறத எடுத்து
வெக்க
வண்டி ஒன்னயும்
தந்துபுட்டு

ஊரு சனங்க
அம்புட்டையும்
காந்தம் போல
இழுத்துப்புட

பங்கு சந்தைல
இருக்கவன்லாம்
உள்ளூர் சந்தைக்கும்
போட்டியிட

காய்கறி வித்த
கெழவியெல்லாம்
இப்ப காணாமலே
போயாச்சி

பலர் வயித்துல
அடிச்சிப்புட்டு
சில வயிருங்க 
வளருது

அண்ணாச்சி கடைய
பொதச்சிப்புட்டு
அம்பானி கடைங்க
மொளைக்குது.















Sunday 9 October 2016

வைர மகுடங்கள்...

நம் நாட்டில் விளையாட்டுக்கே பெரிதாய் அங்கீகாரம் இல்லா சூழலில், பெண்கள் விளையாட்டில் சாதித்துள்ளது, வருங்காலத்தில் நிறைய பெண்கள் விளையாட்டில் கனவு காண வித்தாய் அமையும்.ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சர்வதேச அரங்கில் நம் நாட்டின் கொடியை உயரப் பறக்கச் செய்த பெண்களுக்கு சமர்ப்பணம்.. 


கருவறை.. கல்லறை...

நண்பர் ஒருவர் தன் உடன்பிறந்தவள் கருகலைத்ததில், தான் உருகுலைந்ததை என்னிடம் பகிர்ந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இத்தலைப்பில் சில வரிகள் எழுத வேண்டுமென எண்ணம் உதித்தது. எண்ணத்தின் வெளிப்பாடு இங்கே...  
                        (படம் பெரிதாய் தெரிய படத்தின் மீது "கிளிக்" செய்யவும்)

உயிர் பிணங்கள்

மனிதத்தன்மையற்ற, மனதைப் பாதித்த சம்பவத்தைப் பற்றிய அன்றைய பதிவு...
                          (படம் பெரிதாய் தெரிய படத்தின் மீது "கிளிக்" செய்யவும்)

Saturday 8 October 2016

விடிவு காலம் தூரமில்ல

கார வீட்டு
மருமக
சொமந்த கரு
வெளிவர,
சந்தோஷத்துக்கு
பஞ்சமில்லை,
கொண்டாட்டத்துக்கு
எல்லையில்ல.

ரெண்டு தெரு
பக்கத்துல,
குடுசை வீடு
ஒண்ணுத்துல,
பத்து மாச
முடிவுல,
பெத்தெடுத்தா
ஒத்தபுள்ள.

மேனகாவின்
மாமியாரு
பொட்டபுள்ள
பெத்ததுக்கு,
லட்சுமியே
பொறந்ததா,
கன்னத்துல
முத்தம் வெக்க;

சாந்தியோட
மாமியாரோ, இவ
செத்து பொழச்சு
பெத்தெடுத்தது,
தங்கமில்ல
தகரமுன்னு
சாந்தியை தான்
தள்ளிவெக்க;

தாத்தாவான
சந்தோஷத்துல,
கெடாவெட்டுனார்
நாட்டாம,
பொண்ணு பெத்ததும்
பொண்ணாவ,
விதியை வெறுத்தா
ஆண்டாளு.

தரையிலேயே
கால் படாம
குடும்பம் தாங்க
அவ அங்க,
கட்டாந் தரைல
பாய விரிச்சி,
படுத்து கெடந்தா
இவ இங்க.

பேத்திக்குதான்
பேரு வெக்க,
ஜோசியம் லாம்
பாத்தாங்க,
எழுத்து நாலு
வெச்சிக்கிட்டு,
கூகிள் கிட்டயும்
கேட்டாங்க.

பொறந்த நேரம்
குறிக்கல,
ஜோசியமும்
பாக்கல,
மனச பாதிச்ச
கதையில,
இருந்த பேர
வெச்சிபுட்டா.

நல்ல நாள்
ஒண்ணுத்துல,
ஊர் உலகம்
சுத்தி நிக்க,
வெள்ளி கம்பி
தொட்டிலிலே,
அபிநயானு
பேரு வெக்க;

தென்னை ஓலை
குடுசையில,
பழைய சேலை
தொட்டிலிலே,
மின்னுன
சின்ன பொண்ணுக்கு
மீனா னு
பேரு வெச்சா.

பாலும் பழமும்
ஒரு பக்கம்,
பழைய சோறு
மறு பக்கம்,
வாய் ருசிக்கு
அந்த பக்கம்,
வைத்து பசிக்கு
இந்த பக்கம்.

ஏசி போட்ட
ரூமுக்குள்ள,
பஞ்சு மெத்தை
மத்தியில,
கரடி பொம்ம
பக்கத்துல,
படுத்து கெடக்கு
சின்னபுள்ள.

நிலா வெளிச்சம்
வீட்டுக்குள்ள,
அம்மா பாட்டு
காதுக்குள்ள,
பனை விசிறியோட
காத்தினிலே,
தூக்கம் வழியுது
கண்ணுக்குள்ள.

ஏசி போட்ட
காருகுள்ள,
எட்டடுக்கு
மாலு உள்ள,
மாசம் நாலு
ஞாயிறுமே,
காச தீக்க
போயிவர;

வெசாலகெழம
சந்தையில,
காத்தடைச்ச
பலுகுண்ட,
வாங்கி கையில
குடுத்துப்புட்டா,
சந்தோஷத்துல
குதிச்சிடுவா.

கீச்சு கீச்சுனு
பேசுமுன்னே,
கிரீச்சுல போய்
விட்டுட்டாங்க,
நாப்பதாயிரம்
பீஸ் கட்டி,
நாலுமணிநேரம்
தெனமும் அங்க.

அரசு போடும்
சத்துணவு,
அர வயித்த
ரொப்புமுன்னு,
பால் பள்ளு
மொளச்சவளா,
பால்வாடில
வுட்டுப்புட்டா.

காலச் சக்கரம்
சொழழுதே,
அபி மீனா வாழ்க்கை
வளருதே,
இறுதி தேர்வு
முடியுதே,
முடிவும் ஒடனே
தெரியுதே.

பாஸ் மார்க்கு
வாங்கிபுட்டா,
நெனச்ச படிப்பும்
சேந்துக்கிட்டா,
காசு மட்டும்
இருந்துபுட்டா,
சீட்டு ஒன்னும்
கஷ்டமில்லை.

இட்டிலி கடை
சாந்தியை,
ஹிந்துவும் தந்தியும்
தேடிவர,
குப்பத்துக்குள்ள
ஆரவாரம்,
மாநில ரேங்க்
இவ நெலவரம்.

மருத்துவம்தான்
படிச்சிப்புட்டு,
மறக்காம
இங்கயே வந்து,
மருந்து கழிச்சு
கொடுப்பேன்னு,
சாந்தி பொண்ணு
சொல்லிப்புட்டா.

ஓலை குடிசை
வீட்டுக்கெல்லாம்,
ஏட்டு கல்வி
பாரமில்ல,
சாந்தி பட்ட
கஷ்டத்துக்கு,
விடிவு காலம்
தூரமில்ல...







Friday 7 October 2016

பொறந்தநாள் பரிசு

ராஜரத்தினம் கைக்கடிகாரத்தை இன்னொரு முறை பாத்துட்டு லட்சுமியை ஒரு மொற மொறச்சாரு. "என்னத்துக்கு இந்த மொறப்பு? கடைத்தெருவுக்கு வரதே என்னைக்காச்சம் ஒரு நாள். வந்த எடத்துல நாலு துணி பாக்கறதுக்குள்ள உங்களுக்கு ப்ரெஸ்ஸரு ஏறீடும். இதுக்கு தான் வீட்டுலயே கெடங்க, நானே பாரதியையும், பசங்களையும் கூட்டிட்டு போரேன்னாளும் விடறதில்ல. கூடவே வந்துட்டு இப்படி எதனா எடாகூடம் பன்றது." அந்த மொறப்புக்கு லட்சுமியம்மா நாலு பக்கம் பதிலை சொல்ல, ஹிந்து பேப்பர் குள்ள ஒளிஞ்சிகிட்டாரு ராஜரத்தினம். பக்கத்துல இருந்த ரம்யா குட்டி இதை பாத்து மேல் வரிசைல ரெண்டு பல்லு விழுந்தது கூட மறந்து விழுந்து விழுந்து சிரிச்சா.

"ஏம்மா.. எல்லாருக்கும் எடுத்தாச்சுல்ல. யாரையும் விட்டர்லயே" பாரதியிடம் லட்சுமி கேட்டாள். அனைவரையும் நினைவு கூறியவாறு யோசித்தவள். "ஹ்ம்.. எல்லாருக்கும் எடுத்தாச்சு" பாரதி பதிலதித்தாள். "நம்ம சாந்திக்கும் ஒரு பொடவ எடுத்தரலாம்" லட்சுமி சொன்னதுக்கு "எம்மா.. அதான் தீபாவளி, பொங்கலுக்கு குடுக்கறோம்ல. அதோட நிறுத்திக்க. இப்படிலாம் நடுல குடுத்து பழகாத. அப்டியே சாந்திக்கு குடுக்கணும்னா... என்கிட்ட வேணா பழசு ரெண்டு பொடவ இருக்கு. அத வேணா குடுத்துவிடறன், கண்டிப்புடன் சொன்னாள்.

எல்லாரும் காலைல பத்து மணிக்கு கடைய தொறக்கும் போது உள்ள போனது. வெளில வரும்போது மணி ரெண்டரை. பில்லு மட்டும் செல்வத்துக்கு குடுக்கற வருஷ சம்பளத்துல பாதிக்கு மேல. "செல்வம்... வண்டிய நேரா ஒரு நல்ல ஹோட்டல்கு விடு" ராஜரத்தினம் குரல்ல ஒரு வாரமா பசில இருக்கற சிங்கத்தோட கர்ஜனை இருந்துச்சு. "பாரதி.. அந்த பச்சை கலர் பொடவ  நல்ல தான்டி இருந்துச்சு. பேசாம அதையும் எடுத்திருக்கலாம்..." மறுபடியும் இவங்க பொடவ பேச்சையே ஆரமிக்க... "அட சீக்கிரம் போப்பா..." இவரு செல்வத்த வெரட்டனாரு.

ராஜரத்தினம் டிஸ்ட்ரிக் கோர்ட் ஜட்ஜ்ஆ இருந்து ரிட்டையர் ஆனவர். கோர்ட்டுல தீர்ப்பு எழுதற பேனாவ வீட்டுக்கு வந்ததும் லட்சுமி கிட்ட குடுத்துருவாரு. தங்கமான மனுஷன். ஊர்ல அவருக்கு தோட்டம் தொரவு, மில்லு லாம் பூர்வீகமாவே இருக்கு. பொண்ணு பாரதி அமெரிக்கன் காலேஜ்ல இங்கிலீஷ் ப்ரோபெஸ்ஸர். கண்ணுக்கெதுர்லயே இருக்கட்டும்னு அவள ஊருக்குள்ளேயே கட்டி குடுத்தாரு. பைய்யன் முகிலன் குழந்தை நல மருத்துவர். ராஜரத்தினம் பேத்தியோட மொத பொறந்தநாள் இங்க தான் கொண்டாடணும்னு ஸ்ட்ரிக்ட்ஆ ஜட்ஜ்மெண்ட் சொல்ல, குடும்பத்தோட அடுத்த வாரம் லண்டன்ல இருந்து வர்றான்.

இந்த தடபுடலான ஷாப்பிங் எல்லாம் அபியோட பொறந்தநாளுக்குதான். "மாடில அந்த ரூமை நாளைக்கு கொஞ்சம் ரெடி பன்னீடுமா" வேலைய முடிச்சிட்டு கிளம்பின சாந்தி கிட்ட லட்சுமியம்மா சொன்னாங்க. "சரிங்கம்மா.. நாளைக்கு செஞ்சுர்ரான்" அவ சொல்லீட்டு போனா. நாலு நாள் போனதே தெரியல. பிரிட்டிஷ் ஏர்வேஸ் எறங்கி இப்ப இருவத்தினாலு மணிநேரம் ஆச்சு. கொண்டு வந்த மூட்ட முடிச்சியெல்லாம் பட்டுவாடா பன்னியாச்சு. ஏதோ ப்ரஸருக்கு போடற மாத்தர மாதிரி வேலைக்கு ரெண்டு சாக்லேட் லட்சுமிக்கு தெரியாம இவரு சாப்டுட்டு இருக்காரு. லட்சுமி பாத்தானா போதும் "பேரபுள்ளைங்களுக்கு குடுக்காம சின்ன புள்ளையாட்டம் முட்டாய் சாப்டுட்டு கெடங்கனு" சத்தம் போட்டுட்டு போவா. விடிஞ்சா அபி பொறந்தநாளு.

தடபுடலான ஏற்பாடு. கலர் கலரா தோரணங்கள். பலூன் அலங்காரம். வீட்டுக்குள்ளயே ஒரு சின்ன திருவிழா மாதிரி இருந்துச்சு. சாயங்காலம் சுமார் ஆறு மணிக்கு ஆரமிச்சது. முக்கியமான நண்பர்கள், சொந்தங்கள்னு ஒரு நூறு பேராச்சம் இருந்துருப்பாங்க. அந்த கூட்டத்தை பாத்தா இந்த துணிக்கட, நகைக்கடக்குலாம் ஒரே எடத்துல விளம்பரம் எடுக்க சேந்த கூட்டம் மாதிரி இருந்துச்சு. அங்க பலர் முகத்துல அழக மிஞ்சின ஒரு ஆடம்பரம் கெடந்துச்சு. சாப்பாடு லாம் சொல்லவே வேணாம். ஒரு கல்யாண பந்தில இருக்கற மாதிரி சாப்பாடு.

அபி அந்த பிங்க் கலர் கவுன்ல குட்டி தேவதை மாதிரியே இருந்தா. பாட்டுலாம் பாடி, கேக் வெட்டி, எல்லாரும் கொண்டு வந்த கிப்ட்லாம் குடுத்தாங்க. ராஜரத்தினம் பேத்திக்கு வைர மோதிரம் போட, பாரதி தங்க காப்பு ஒன்னு குடுத்தா. பிறகு தடபுடலா பந்தி நடந்துச்சு. இவ ஒக்கார நேரமில்லாம ஓடி ஓடி பரிமாறனா. நேரம் போக போக எப்பதான் வேல முடிஞ்சி போறதோன்னு அவ கிட்ட ஒரு தவிப்பு இருந்துச்சி. மொத்த கூட்டமும் போன பெறகு தான் இவளோட சில வேலைங்க ஆரமிக்கும்.

ஒரு ஒம்போதைரைக்குலாம் எல்லாருமே போய்ட்டாங்க. அந்த இடமே வெறிச்சோடி இருந்துச்சு. ஓரளவுக்கு வேல முடிஞ்சப்ப, "மீதிய காத்தால நேரமா வந்து செஞ்சருட்டுமா மா?" அவ லட்சுமியம்மாகிட்ட கேட்டுட்டு இருக்க. "அத வேற என்ன நாளைக்கு செஞ்சிகிட்டு. கையோட முடிச்சிட்டு போய்டு சாந்தி" பாரதியோட கொரல் பதிலா வந்துச்சி. எல்லாத்தையும் ஏறகட்டீட்டு இவ வீட்டுக்கு போவ மணி பதினொண்டரை ஆயிடுச்சி.

இவ வீட்டுக்குள்ள நொழஞ்சதும் நொழயாததும் "ஏண்டி.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வர கூடாது" சாந்தியோட அம்மா ஆண்டாள் கேட்டா. ஆண்டாள பொருட்படுத்தாம சாந்தி உள்ள எட்டி பாத்தா. அந்த ஓரம் கிழிஞ்ச கோர பாய்ல, முடிஞ்ச துணிமூட்டைய தலைக்கு வெச்சி, இவளோட கிழிஞ்ச சேல ஒன்ன போத்தீட்டு வாடிப்போன ரோசா மாதிரி படுத்து கெடந்துச்சு இவ மக மீனா. அதனோட பிஞ்சு கை அந்த பிங்க் கலர் கவுன புடிச்சிருந்துச்சு. போன வியாழக்கிழம சந்தைல, இவ புடிச்ச புடிவாதம் தாளம, அடிச்சு பேசி நூத்தம்பது ரூபாய்க்கு வாங்கனது. வாங்கன அன்னைக்கே போட்டு பாக்கணும்னு அவ தவியா தவிக்க. ".. பாரு.. இப்பயே போட்டுபுட்டா.. அடுத்த வாரம் பொறந்தநாளைக்கு பழசா போய்டும். அன்னைக்கு தான் போடணும்னு சாந்தி அதட்டியே வெச்சிருந்தா.

இன்னைக்கு காத்தால கூட ஆண்டாளு தண்ணி ஊத்தி விட. குளிச்ச ஈரத்தோட வந்து நின்னவ நேரா அந்த டிரங்க் பொட்டில இருந்து அந்த புது துணிய எடுத்து நிக்க. சாந்தி "இத போட்டுனு எப்படி பள்ளிக்கூடம் போவ... இந்த யூனிபார்ம் போட்டுக்க. சாயங்காலம் பள்ளிக்கூடத்துல இருந்து வந்த ஒடனே புது சொக்கா போட்டுட்டு, அம்மா கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்"னு வாக்கு குடுத்து அத வாங்கி வெச்சிட்டா.

"நீ வருவ வருவனு எதிர்பாத்து ஏமாந்து போய் தூங்கீருச்சி டி. அது ஆசயா வாங்கன அந்த புது சொக்காய கூட போடல. அம்மா வந்து தான் போட்டுவுடனும்னு ஒரே அடம். என்ன கிட்டவே நெருங்க விடல" ஆண்டாள் சொன்னாள். "பொறந்தநாளதுவுமா சாயங்காலம் அந்த சொக்காய மாட்டி, பக்கத்தல இருக்கற புள்ளயார் கோவிலுக்கு கூட்டீட்டு போவகூட நேரமில்லாம அப்படி என்னாடி கலெக்டர் உத்தியோகம் பாக்கற" ஆண்டாளு சொல்ல சொல்ல இவ ஒடிஞ்சு போய்ட்டா.


அங்க அடுத்தவன் வீடு பொறந்தநாளுல ஓடி ஓடி ஊருக்கெல்லாம் பரிமாறானவளுக்கு, அவ சுமந்து பெத்த செல்லத்துக்கு பொறந்தநாளதுமா ஒரு வா சோறு ஊட்டி விட கூட குடுத்துவெக்கல. அவளோட இயலாமையும், தேக்கி வெச்ச மொத்த பாசமும் தார தாரயா கண்ணுல இருந்து வந்துச்சு. தூங்கீட்டு இருந்த பொக்கிஷத்த அள்ளி அனைச்சு ஒரு முத்தம் குடுத்தா. அந்த ஆத்மார்த்தமான முத்தம் தங்கத்தையும் வைரத்தையும் விட ஒசத்தியான பொறந்தநாள் பரிசு.


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...