Friday 20 October 2017

தோட்டா

ஒருவனின் பெருங்கோபமா
இல்லை அவ்வொருவன்
சமூகத்தின் ஒரு துளியா
அவனின் விரல்கள் மீட்க 
பேரமைதியைக் கிழிக்கும்
பெருத்த இசையுடன்
ஆயுளைக் குடிக்க
அதீத விசை தோட்டா
மூச்சிற்கு முற்றுப்புள்ளி
அது எரியும் பெருந்தீயினை
அணைக்கும் நீர்த்துளியா
உறங்கும் மாமலையை
எழுப்பும் தீப்பிழம்பா
லிங்கனோ லேடனோ
ஹிட்லரோ காந்தியோ
சேகுவராவோ
பெனாசீர் பூட்டோவோ
அடக்குமுறையோ
அதிகாரமோ
அரசியலோ தான்
சரித்திர தோட்டாக்களின்
இயங்கு விசை
உடல் கிழித்து
சிதறும் குருதித் துளிகள்
எழுதுவதில்லை
இறுதி சாசனத்தை
படை பலத்தவனோ
பணம் படைத்தவனோ தான்
மடிந்தவன் கதையென
மந்தைகளுக்கு உரைப்பான்
இக்கணம்
யாரோ ஒருவன்
போதனையில்
எங்கோ ஒரு
துப்பாக்கியில்
உலக அமைதிக்கான
அடுத்த தோட்டா
அமைதியாய்
உறங்கிக்கொண்டிருக்கிறது


Wednesday 11 October 2017

பெண் குழந்தை

கல்பனாவின் வசைகள் 
காவியாவின் முத்தத்தில்
மூழ்கி மறைந்தே போயின
கனகசபாபதிக்கு

இசைஞானியும்
இசைப்புயலையும் விட
இனியாவின்
நிலா நிலா ஓடிவாவில்
இலகியது
இளங்கோவின் இதயம்

கயலுக்காக
டைரி மில்க்
வாங்கும்போது
கார்த்திக்கிற்கும்
சேர்த்து வாங்க
சொல்லும்போது
அவள்
உயர்ந்தே நிற்கிறாள்

விளையாடுகையில்
இடறி விழுந்த
வருணிற்கு
எச்சில் தொட்டு
மருந்து வைக்கையில்
மருத்துவராகிறாள்
யாழினி

கலங்கியிருக்கும் பத்மாவின்
கண்களை துடைக்கும்
அபியின் சிறுவிரல்களால்
விட்டோடியவன் எழுதிய
கடைசி கடிதத்தின்
கணம் குறைந்தது

காலுடைந்த
குட்டி நாய்
விரைந்து குணமாக
முணுமுணுத்து
வேண்டுகிறாள்
அந்த குட்டி
தேவதை

அந்த பெரிய
கரடி பொம்மை
பிடிக்கவில்லையென
என் நிலை அறிந்து
பொய் சொன்னவள்
நிச்சயம் சிறுபிள்ளையாக
இருக்க முடியாது

என் கைபிடித்து
கரும்பலகையில்
எதையோ எழுதியவள்
அப்பா இது தான்
உன் பேரு
எனச்சொல்லி
சிரிக்கும்போது
சிலிர்த்தது அவன் உள்ளம்

கல்லுடைத்து
வீடு திரும்பியவன்
கைககளை பிடித்து
மயிலிறகால்
வருடும் சிறு கரங்கள்
இறந்த அவன்
அன்னையையே
நினைவுபடுத்தின


தீக்குச்சி

ஒரு அரசியல்
தலைவனின் கைதிற்கு
சில தொண்டர்கள் 
உரசிய குச்சி தான்
எலும்புக்கூடாய் பேருந்தும்
சாம்பலாய் சில உயிர்களும்
உயிரினும் உயரியதா
ஐந்து பவுன் தங்கம்.
தீரா வயிற்று வலியால் தான்
தீக்கிரையாகினாள் என
திரித்த கதையைத்தான்
தினசரிகள் சொல்லின
ஏழு வருடங்களாய் பல சோதிடர்கள்
சொன்ன பரிகாரங்களை செய்தவள்
இன்றும் பக்தியுடன் ஒரு தீக்குச்சி.
திரியின் நுனியில் சுடரும் ஒளியில்
கருணை வடிவாய் அவள் விழி
கண்ணீர்துளியுடன் இவள் விழி
விருப்பமில்லையென
வார்த்தைகளால் மறுத்திருக்கலாம்.
மதம்பிடித்தவன் மதிகெட்டு
பற்றவைத்த சாதியத்தீ
தீப்பிளம்பாய் கீழத்தெரு
சாம்பல்கூடாய் அவன்
முரண்களுடனே முடிவுற்ற உறவு
மூன்றாம் சுற்றின் முடிவில்
வெட்டியான் கிழித்த தீக்குச்சில்
பற்றிய அவன் நெஞ்சம்
இன்றும் புகைந்துகொண்டிருக்கிறது


Tuesday 10 October 2017

போர்

வண்ணத்துப் பூச்சிகளுக்கு
கொடுக்குகள் முளைக்கட்டும்
ஆடுகள் அசைவமாகி
மேய்ப்பவனை விழுங்கட்டும்
விதைகளுடன் ஆயுதங்களும்
மண்ணில் விளையட்டும்
நிலத்தை கூறுபோடுபவன்
உடல்கள் சிதையட்டும்
போர்த்தொழில் பழகி
புறாக்கள் பறக்கட்டும்
அக்கிரமக்காரர்களை அவை
அமைதியாய் அழிக்கட்டும்
வெடிகுண்டு செய்வதை
குருவிகள் கற்கட்டும்
கட்டிடங்கள் மீதெல்லாம்
குண்டுகள் வைக்கட்டும்
மலர்கள் நறுமணத்துடன்
விஷவாயு கக்கட்டும்
நுகரும் மந்தைகள்
நுரைதள்ளி மடியட்டும்
ஆற்றுப் படுக்கைகள்
புதைமணலாகட்டும்
மானுடன் கால் பட்டால்
அவன் மண்ணோடு போகட்டும்
எறும்புகள் நம் உணவில்
நஞ்சினை கலக்கட்டும்
கொசுக்களும் ஊசியால்
உயிரைக் குடிக்கட்டும்
நாய்கள் நரியாகி
குரவளைக் கடிக்க
பூனைகள் மதம் பிடித்து
மனிதனை மிதிக்க
நாவறண்டு சாகத் துடிக்கும்
கடைசி உயிருக்கும்
நாரையோ காகமோ
கரிசனம் காட்டாதிருக்கட்டும்
ஐந்தறிவுடன் போரில்
ஆறறிவு அழியட்டும்
அகிலமே மீண்டும்
புதியதாய் மலரட்டும்


Saturday 7 October 2017

ஒரு கணம்

ஒரு கண சந்தேகம்
உறவுகளில் விரிசல்
ஒரு கண மோகம்
ஒழுக்கத்தில் கறை
ஒரு கண இயலாமை
வெற்றி கைதவற
ஒரு கண வெறுமை
தற்கொலையைத் தூண்ட
ஒரு கண கோவம்
பிரச்சனைகள் பிறக்க
ஒரு கண மௌனம்
உண்மைகள் புதைய
நிகழ்பவை எல்லாமே
அவ்வொரு கணத்தில் தான்
ஒரு கணம் யோசிப்போம்
அல்லவை குறையும்


Monday 2 October 2017

தேவை

ஒரு துளி நீர்
இரு நெல்மணி
நெளியும் புழு
ஊரும் பாம்பு
சிறு தட்டான்
முழுத் தவளை
புல்லின் நுனி
பூவின் தேன்துளி
குலை வாழை
அரை கொய்யா
கறிதுண்டு
சிறு மீன்
ஒரு மான்
சிந்திய சீனி
சிதறிய சோளம்
ஒருபிடி சோறு
என உயிர்களின்
தேவை சிறிது
இதை அறிந்தால்
வாழ்க்கை இனிது.



Monday 25 September 2017

தழும்பு

புளியங்குளம் சாலையில்
வந்த ஹோண்டா ஷைன்
இருசக்கர வாகனத்தை தான்
இடை மறித்து
அவை கடந்து கொண்டிருந்தன
சற்றே பட்டையான
ஃபிரேமுடைய தடிமனான
கண்ணாடி,
அரை வழுக்கை போக
மீதமுள்ள முடிக்கு
எண்ணெய் வைத்து
படிய வாரிய தலை,
கோடு போட்ட
வெளீர் காபி நிற
அரைக்கை சட்டை,
கனமான டைட்டன்
கைக்கடிகாரம்,
நீலம் சிவப்பென
சட்டைப்பையில் இரண்டு
ரெனால்ட்ஸ் பேனா,
பிரவுன் நிற
பட்டையான வார்
வைத்த செருப்பனிந்த
ஐம்பதை நெருங்கும்
அந்த இருசக்கர
வாகனத்திலிருந்தவர்,
என்னைப் பார்த்ததும்
அசெளகிரியமாய்
குறுகினார்
ஆறாவது படிக்கையில்
அவரது பிரம்பால்தான்
படிப்பே வேண்டாமென
பண்ணையில் சேர்ந்தேன்.
இன்று ஆடுகளை
விரட்ட கம்பால் அடித்தது
அவரது முதுகிலும்
தழும்பாகிப்போகுமோ?



Friday 22 September 2017

நிஜம்

மூன்று சென்டில் வீடு
இரண்டு ஏக்கர் நிலத்துடன்
ஒரு லட்சம் ரொக்கம்
கணக்கு பிள்ளையின்
மகள் திருமணத்திற்கு
பரிசாய் குடுத்த
பெரிய பண்ணை
சாந்தி காலனி
நான்காம் சந்து
மூன்றாம் தளத்தில்
இரண்டு மாதமாய்
வீட்டு வாடகை 
கொடுக்கவியலா 
நலிந்த நடிகர்


Wednesday 20 September 2017

தரம்

இரண்டாம் சிரமுடைய
இனம் ஏதும் உண்டோ

மூன்றாம் கரமுள்ள
மதத்தினர் யாரும் உண்டோ

ஏழாம் அறிவுடையோர்
எட்டுத்திக்கில் உண்டோ

சிவப்பில்லா குருதியுடன்
மேன் மக்கள் உண்டோ

சாவா வரம் பெற்ற
சாதியினர் உண்டோ

பசியென்னும் பிணியில்லா
மாந்தர் மண்ணில் உண்டோ

மனிதர் அனைவருக்கும்
சமமாய் எல்லாம் இருக்க

சமயம் சாதி சன்மார்க்கம்
மொழி இனம் நிறமென

தரம் பிரித்து வாழ்வது
தரக்குறைவன்றோ



எதைப்பற்றி எழுதுவது

பார்வை தொலைத்து
கையேந்துபவனா
கண்கள் பார்த்தும்
கடப்பவனா
முதுகு வளைந்தும்
முழம் போடுபவளா
குறைக்கச் சொல்லி
விலை பேசுபவனா
பசியின் பிடியில்
திருடுபவனா
திருட்டுக் கொடுத்து
கதறுபவனா
பெண்மையைப் பறித்த
மிருகத்தையா
கற்பே அடகாகும்
வறுமையையா
நதிகள் நடத்தும்
அரசியலையா
நிதிகள் எழுதும்
தேர்தலையா
கடலில் எல்லை
கடப்பவனா
கடப்போர் உயிரைப்
பறிப்பவனா
கழுத்தறுக்கும் சாதிய
கத்தியையா
துடித்திறக்கும் சாமானியன்
காதலையா
கனவைப் பறிக்கும்
தேர்வினையா
கனவிழந்தோர் ஆறாத்
துயரினையா
இதில் எதைப்பற்றி
எழுதுவது
கேள்விகள் என்னுள்
எழுகிறது


Tuesday 19 September 2017

சுத்தம் இருப்பினும் மருத்துவம்

மணல் குவித்து
வீடு கட்டுவதோ
நாற்றுகளாய்
சேற்றில் குதிப்பதோ
களிமண் குழைத்து
பொம்மை செய்வதோ
புழுதிக் காட்டில்
சடுகுடு ஆடுவதோ
குழாயடி நீரில்
தாகம் தணிப்பதோ
அணில் கடித்தெறிந்த
கொய்யாவோ
கிழவி உப்பிலிட்ட
நெல்லியோ
கவரில் அடைத்த
குழல் வத்தலோ
கண்ணாடி பாட்டில்
வழியே சிரிக்கும்
தேன் மிட்டாயோ
தேங்காய் பர்பியோ
மிதிவண்டி மீதுவரும்
சேமியா ஐசோ
வெங்காய சமோசாவோ
கிரிஜா அக்கா
கீரை வடையோ
முருகன் கடை
முருகல் தோசையோ
சுத்தமற்றது எனவும்
சுகாதாரமில்லை எனவும்
குளிரூட்டிய அறையில்
ஐ-பேடில் விளையடி
கண்ணாடி சுவரெழுப்பிய
கடைகளிலேயே உண்டு
சுத்திகரிப்பானில்
கைதுடைத்து
சுத்திகரிக்கப்பட்ட
நீரருந்தியவனுக்கு
எப்படி வந்ததென்றே
தெரியவில்லை
டஸ்ட் அலர்ஜியும்
புட் பாய்சனிங்கும்.
நாட்டு மருந்து
கடைக்காரர் தான்
வழி சொன்னர்
அந்த ஆறடுக்கு
மருத்துவமனைக்கு.




நாடே காடாகும்

நிலம் நீர்
மட்டுமின்றி
உரம் உழைப்பு
மட்டுமின்றி
திங்கள்கள் சில
அதிலும்
இன்னல்கள் பல.
மழையோ வெயிலோ
தவறினாலும்
தாமதித்தாலும்
கேணியோ குளமோ
தரை தெரிந்தாலும்
கரை புரண்டாலும்
ஒப்புக்கு தீர்ப்புகளும்
ஒப்புக்கொள்ளா
நாடகங்களும்
இயற்கையின் விதி
அரசியல் சதி
விளைவுகள் என்னவோ
விளைச்சலில் தான்.
முதலையும் கொடுக்கா
கொள் முதலைகள்
பசுவை அழித்து
பசுமை யுக்திகள்
தில்லியில் கூவியும்
செவி கேளாமல்
அரை நிர்வாணத்தையும்
கவனிக்காமல்
வாழ்வியல் விவசாயத்தில்
வர்த்தக விஷமேறி
ஜனநாயகம் நுரைதள்ளும்.
பால் பழம் பல்வகை
தானியங்களுடன்
அரிசியும் அரிதாகும்
நாடே காடாகும்.


அம்முவாய் மாறிய பிங்கி

அழுக்கு தேகத்தில்
ஒற்றைக் கண்ணுடன்
அறுந்து தொங்கும் காதுமாய்
குப்பையில் கிடந்த
அந்த கரடி பொம்மை
தான் முன்பிருந்த
அடுக்குமாடி குடியிருப்பின்
பதினெட்டாம் மாடியில்
குளிரூட்டப்பட்ட அறையும்
வசதியான மெத்தையையும் விட
சூரியனுன் சந்திரனும்
எட்டிப் பார்க்கும் கூரையுள்
ஓரம் கிழிந்த பாயும்
துணிகளை சேலையுள்
முடிந்த தலையணையும்
மூக்கொழுகும் அந்த
பரட்டைத்தலை சிறுமியும்
அவள் ஊட்டும் பழையதும்
பிடித்துத்தான் போயின
அம்முவாய் மாறிய பிங்கிக்கு.


பெரியார்

அன்றவன் கல்வியை
பொதுவாக்கினான்,
அறிவைப் புகட்டியே
வேற்றுமை வேரருத்தான்
இன்று குளங்கள்
மட்டும் பொதுவாகவில்லை
கோவில்களில் மட்டும்
கதவு திறக்கவில்லை
சவரம் செய்தவர் மகன்
சார்க் உச்சி மாநாட்டில்
ஆடைகள் வெளுத்தோர்
ஆடை வடிவமைப்பில்
கல்வி பறிக்கப்பட்டோர்
கல்லூரி பேராசியர்களாய்
பொதுவழி மறுக்கப்பட்டோர்
விண்வெளி ஆராய்ச்சியில்
பொறியியலும் மருத்துவமும்
கிடைக்கப் பெற்றாலும்
மலமள்ளும் இழிநிலையும்
இருக்கத்தான் செய்கிறது
பொதுக்குழாய் நீரும்
பொதுவழியில் தேரும்
வெற்றிதான் எனினும்
போதாது
சகலமும் சமமெனும்
நாளது வரும்வரை
பெரியாரின் விதைகள்
ஓயாது


Wednesday 9 August 2017

காயத்ரி

பேச்சும் சிரிப்பும்
அவள் அழகெனினும்
வீரமும் நேர்மையும்
கூடுதல் அழகு
முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும்
தொலைந்தவர்கள் இடையே
புத்தகங்களுக்குள் தொலைந்தவள்
கரப்பான்களுக்கு பயப்படும்
பெண்களிடையே
கட்டுவீரியனை கதை பேச அழைப்பவள்
பேய் பூதங்கள், நடுநிசி நாய்களுக்கு
அஞ்சும் மகளிர் நடுவே
கான்ஜுரிங்கும் எக்ஸ்சார்சிஸ்டும்
கண்சிமிட்டாது பார்ப்பவள்
இசை அவள் இலகுமிடம்
மகிழ்ச்சி மிகுதியில்
அவ்வப்போது அவளே குயிலாவாள்
இந்த தமிழ் குயில்
ஜெர்மன் மொழியிலும் பண்ணிசைக்கும்
தென்னிந்திய மொழிகள் மீது
ஏனோ ஒரு தீராக் காதல்
படங்கள் வழியே
அவளது மொழிப் பாடங்கள்
மோகன்லால் மம்மூட்டியுடன்
துல்கரும் நிவினும் இவளுடன்
மலையாளத்தில் சம்சாரிக்க
மகேஷ்பாபுவும் பவன் கல்யாணும்
தெலுங்கில் மாட்லாட
யஷ்ஷிடம் கன்னடமும்
படங்கள் வழி பயின்றவள்
ஹிந்தியையும் அறிவாள்.
ஆனால் அதன் திணிப்பை
தமிழ்வாள் கொண்டு எதிர்ப்பாள்
அச்சமும் நாணமும் விட
சுதந்திரமும் சுயமரியாதையும்
பெண்ணிற்கு அழகென நினைப்பவள்
சமைப்பதும் துவைப்பதும் விட
சமஉரிமைகள் இருப்பது
அவசியமென வாழ்பவள்
பார்லர்களிலும் பாரிலும்
மூழ்குபவரிடையே
அடர்காட்டில் ஒரு செடியாகவும்
ஓடும் நதியில் ஒரு துளியாகவும்
தொலையத் துடிப்பவள்
பிறர் பொறாமை படுமளவு
கனவுகள் கண்டு
விடியல்கள் தாண்டியும்
விழித்துக் கிடப்பவளே
சிகரங்கள் தாண்டியும்
நீ சிறகடித்துச் செல்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Thursday 3 August 2017

சுற்றுசூழல்

குழிகள் மூடப்பட்டு
புதியதாய் தார் பூசி
மரங்கள் வெட்டப்பட்டு
முன்பை விட
விசாலமாக இருக்கிறது 
அந்த சாலை
சுகாதாரத் துறை
அமைச்சரும்
சுற்று சூழல்
ஆர்வலர்களும்
உலக சுற்றுசூழல் தின
கருத்தரங்கிற்காக
குறிஞ்சிப்பாடி வருவதால்

அன்றாடம்

சற்று தொலைவிலிருந்தே
தான் வருவதை அறிவிக்கும்
ஒலியை தொடர்ந்து எழுப்பி
அந்த முச்சந்தியில்
பெரும் புழுதியைக் கிளப்பி
தெற்க்கு நோக்கிச் செல்லும்
அந்த தனியார் பேருந்தின்
சத்தம் கேட்டாலே
பிரபாகரன் டீக்கடை பென்ஞ்சில்
தினத்தந்தி வாசிப்போருக்கும்
மாடர்ன் மணி சலூனில்
இந்தியா இலங்கை டெஸ்ட்டு மேட்ச்
பார்க்கும் ஆடியன்சுக்கும்
செல்வம் ஓட்டலில் புரோட்டாவிற்க்கு
காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும்
நன்கு தெரியும் அப்பொழுது
நேரம் காலை பத்தரை என்று.

முதுமை

காலை சர்க்கரையில்லா
காபியுடன் தினமணியும்,
நேரம் தவறாமல் உணவும்,
படுக்கை, தொலைக்காட்சி,
கழிப்பறை வசதியுடன் 
தனி அறையும்,
தனிமைப்படுத்தப்பட்ட
ரங்கசாமியின்
சந்தோஷமில்லையென
ராஜேஷ் இறுதிவரை
அறியவில்லை.


***************************************************************************************

மலமும் மூத்திரமுமாய் 
கிடந்தவளை
மகளும் மருமகளும் 
ஒதுக்கியவளை
டெட்டால் நீரால் 
துடைத்து
துணிமாற்றி
கடந்த நான்கு
மாதங்களாய்
பணிவிடை செய்யும்
பத்மாவிற்க்கு
தன் கைவளையைக்
கழற்றித் தந்த
இரவு தான்
அவள் இறுதியாய்
கண்ணயர்ந்தாள்.


************************************************************************************

மூச்சிரைக்க மூன்று முறை
பூங்காவை வளம் வந்து
கல்லிருக்கையில் அமர்ந்தவுடன்
இரு தினம் முன்பு 
பரிசோதனை முடிவில்
துடிக்கும் இருதயம்
தவிக்கும் நிலையெனவும்
சர்க்கரையின் சதவிகிதமும்
சற்றே கூடுதலெனவும்
அதிக உடல் எடை
அதிக ஆபத்தெனவும்
மருத்துவர் சொன்னது தான்
அவர் மனதினில் ஒலித்தது

திருமணத்திற்கு நிற்கும் அபிநயா
பிளஸ் டூ பயிலும் அபிஷேக்குடன்
தன்னை தவிர ஏதுமறியா
சிவகாமியின் முகமும்
ராஜேந்திரனின் கண் முன் வர
ஒரு பெருமூச்சுடன்
மீண்டும் எழுந்து
நடக்கத் தொடங்கினார்
சற்றே வேகமாக
நான்காவது சுற்று...!

முதல் தாரத்தின் மகள்

என்ன தான் இருந்தாலும்
இன்னொரு வீட்டுக்கு போய்
அடுப்படில இருக்கபோறவளுக்கு
இன்ஜினியரிங்லாம் எதுக்கு
எதனா டிகிரி படிச்சா 
போதாதான்ன்னு
மூன்று வருடம் முன்னர்
இவளுக்கு சொன்னவளே தான்,
"செலவானாலும் பரவாயில்ல,
கீர்த்தனா ஆசைபடறதயே
படிக்க வெக்கலாம்,
நமக்குன்னு இருக்கறது
ஒரே பொண்ணு"
என்று அவரிடம் இன்று பேசுவதை
எதேர்ச்சியாய்க் கேட்டுக் கடந்தவள்
தன் அறையினுள் சென்றதும்
தலையனையைக் கட்டியணைத்து
ஓவென அழுதாள்.
தன் நாட்குறிப்பின் நடுவே
இருந்த பாஸ்போர்ட் சைஸ்
புகைப்படத்திலுள்ள
கனிந்த பார்வையுடன்
மலர்ந்த முகம் கண்டதும்
ஆறுதலடைந்து அமைதியானாள்.
அச்சில் வார்த்தார் போல்
அதே சாயலில்
இவளது முகமும்
மலர்ந்து கிடந்தது
அந்த கல்லூரியின்
அடையாள அட்டையில்,
யாழினி இயற்பியல்
மூன்றாம் ஆண்டு.

****************************************************************************

அவர் வீட்டிலில்லா
சமயங்களிலேயே
அடிபட்டு, மிதிபட்டு,
வசை சொல்லில்
வதைபட்டவள்,
இனி இவள் கையில் என்னவாகப்போகிறாளோ
அவர் ஒரேடியாய்
உறங்கியபின்னர்.

Thursday 6 July 2017

பிரியாணியும் பீடியும்

மாநகரின் மைய்யத்தில்
ஆடம்பரம் சொட்டும்
அதி நவீன கட்டமைப்பில்
கண்ணாடி சுவர்கள்
கண் கவர் விளக்குகள்
பளிங்கு தரை
தேக்கு மேஜைகள்
மெத்தை ஆசனங்கள்
சீராய் அடுக்கிய
தேக்கரண்டி, முள்கரண்டி.
வெள்ளாவி கண்ட
வெண் கைக்குட்டைகள்
இருந்த குளிரூட்டப்பட்ட
அறையில் தான்
ஈச்சங்குடியில்
இரண்டு ஏக்கர்
குத்தகை நிலத்தில்
சேற்றுழவுடன்
நாற்று நடவும் செய்து
ஊற்றும் வியர்வையில்
ஐந்து திங்கள் விளைந்த
பாசுமதி அரிசியுடன்
அரசனூரில்
பிரசவ வலியில்
அபாய கட்டத்தில்
கிடந்த மனைவியின்
சிகிச்சை செலவிற்காய்
பாயிடம் விற்ற
ஆட்டுக்குட்டியையும் சமைத்து
கண்ணாடி சட்டியில்
மேற்கத்திய உடையில்
கையுறை அணிந்த
தோழரால்
பரிமாறப்பட்டது
அந்த விலையுயர்
மட்டன் பிரியாணி
இன்று ஈச்சங்குடியில்
ஈரத்துணியும்
அரசனூரில்
அரசன் பீடியும்
மதிய உணவாக


விவசாயி

ஒரு மூட்டை
விதை வாங்கி
ஒரு ரூபாய்
குறைக்க வில்லை
இரு மூட்டை
உரத்திற்கு
இனாமாய் ஏதும்
கிடைக்கவில்லை
அக்கினி வாயு
வருணனெல்லாம்
அவன் தேவைக்கு
வருவதில்லை
தடையில்லா
மின்வசதி
மருதத்திற்கு
சொந்தமில்லை
விளைச்சலுக்கு உளைச்சலுக்கும்
விலை வைக்கும்
உரிமை அவன் 
பெற்றதில்லை
வியாபாரி நிர்ணயித்த
விலைக்கு கூடுதலாய்
ஒரு ரூபாய்
கொடுக்கவில்லை

Monday 3 July 2017

கோலம்

"ஒரு நாள்
கெழமைலயாச்சும்
நேரமா எந்திரிச்சு
வாசல் தெளிச்சு
ஒரு கோலம் போடறயா?"
அவளின் வசை கேட்டே
விடிந்தன இவளின்
பண்டிகை நாட்கள்.
இப்போதெல்லாம்
அனுதினம்
அரிசி மாவெடுத்து
கம்பிக்கோலங்கள் இட்டு
ஒரு நிமிடம்
மௌனமாய்
பார்த்து நினைப்பாள்,
மறைந்த அவள் தாயும்
எங்கோ இருந்து
இதை ரசிப்பாள் என


கல்யாண வீடு

புன்னகையால்
மிளிரும் முகங்கள்
முகப்பில் கொலை
தள்ளிய வாழை
சீரியல் செட்டுடன்
சிரிக்கும் பந்தல்

மூக்குப்பொடியை
நாசிக்குள் இழுத்து
ஜி.எஸ்.டி பற்றி விவாதிக்கும்
மலைச்சாமி தாத்தா

வெற்றிலையைக் கொதப்பியபடி
ராகுகாலத்திற்குள்
படையல் வெக்கனும்னு
பொலம்பலாய் அதட்டும்
பாண்டியம்மா பாட்டி

வீட்டிற்கு வந்த
சொந்தங்களுக்கும்
நட்புகளுக்கும்
தேனீர் போடச் சொல்லும்
சேதுபதி பெரியப்பா

குலதெய்வத்திற்கு உடைக்க
கூடுதலாய் ஒரு தேங்காய்
வாங்க கடைக்கு
ஒரு வாண்டை விரட்டும்
விசாலம் அத்தாச்சி

குவித்து வைத்த
மல்லிகையை
செண்பகம் சித்தி
தலைமையில்
கூட்டமாய் கட்டிக்
கொண்டிருக்கும் மகளிரணி

ஒருபுறம்
சதாசிவம் சித்தப்பாவோ
மூன்று மணி இரயிலில்
வரப்போகும் நட்புகளுக்கு
வண்டி அனுப்ப
சொல்லிக்கொண்டிருக்க

மறுபுறம்
ஆறுமுகம் அண்ணனோ
வுட்லேண்ட்ஸ் ஓட்டலுக்கு
அழைத்து கூடுதலாய்
இரண்டு அறைகள் சொல்ல

குறுக்கும் நெடுக்குமென
விரட்டி ஓடிக் கொண்டிருந்தனர்
கார்த்தி. மீனா,
கிஷோருடன் நான்கைந்து
பொண்டு பொடுசுகள்

பேருந்து நிலையம் எதிரேயும்
அண்ணா சிலை அருகேயும்
மண்டபத்தின் முகப்பிலும்
ஃபிளக்ஸ் ஏற்றிய
களைப்பில் வரும்
தம்பிமார்கள்
ராஜி, பாண்டி, பிரபா

வீட்டின் ஒரு அறையில்
ரகசியமாய் பேசி
சத்தமாய் சிரிக்கும்
நித்தியாவின் தோழிகள்
என கூட்டம்
சிரிப்பு சத்தங்களைத் தாண்டி

நான்கைந்து வீதிகளுக்கு
கேட்குமாறு
ஒலித்துக்கொண்டிருந்தது
இசைஞானி இசையில்
"நான் தேடும்
செவ்வந்திபூவிது..."

#கல்யாணவீடு


துளிகள்

லவங்கம், பட்டை
கிராம்பில் இல்லை,
லயித்து சமைக்கும்
அவள் கைகளில்
உள்ளது - மணம்.



பிரியாணியால்
நிறைந்த
இரைப்பைகள்
செரிமானத்திற்கு
வாங்கும் 
வெற்றியையில்தான்
அந்த வீட்டில்
உலை கொதிக்கிறது



இன்றைய
நிறைவான
வருமானம்,
அந்த
வரதரின் 
வரமா
தெரியாது.
- அந்தோனி
(பலூன் வியாபாரி)



முத்தென மூன்றை
நெஞ்சில் சுமந்து
வளர்த்து
முதுமையில் இன்று
மூட்டைகள் சுமக்கும்
வாழ்க்கை


மண்புகுந்த கலப்பை
மண்டியிட்டு சொன்னது
மண்ணுயிர்கள் மாண்டு
மயானமான நிலத்தில்
மாயங்கள் நிகழாதென
செயற்க்கையுடன் சேர்க்கை
அமோகத்துடன் சேர்ந்து
அழிவையும் பரிசளிக்க,
மீட்டெடுக்கும் கட்டாயத்தில்
இன்றைய விவசாயம்.



பசியிடம் 
அடிமை பட்டவளுக்கு
மூவர்ணம் விற்று 
தீர்த்தால் தான்
இன்று 
மூன்று வேலை
சுதந்திரம்





வேங்கை
நாகம்
பருந்தென
அனைத்து
உயிர்களை
விரட்டியும்
விழுங்கியும் தான்
அந்த காடு
கொடிய
மனிதர்களின்
ஊரானது.





வரி

நாளை வரை
தாங்காதென
இன்றிரவிற்குள்
எப்படியேனும்
வந்த விலைக்கு
விற்றுத் தீர்க்க
வண்டியைத் தள்ளும்
வாழைப்பழ வியாபாரி
அன்றிரவு வீடு
திரும்புகையில்
தன் மகளுக்காய்
வாங்கினார்
கூடிதல் வரி செலுத்தி
சானிடரி நேப்கின்.

Monday 5 June 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர் ???

"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"
ஆசியர் பாடியதும்
ஆத்திரத்தில் மாணவன்.
யாதும் ஊரென
யாரவன் சொன்னது
கொதித்துப் போனவன்
கோபமாய் கொக்கரித்தான்
புதியதாய் வந்திருந்த
ஆசிரியர் அறியவில்லை
கடலெல்லை தாண்டியதால்
தோட்டாக்கள் உடல் துளைத்து
இருமாதம் முன்பு தான்
இறந்தார் இவன் தந்தையென


- ச நந்த குமார்

Tuesday 23 May 2017

முதுமை - வாழ்க்கை

பல ஆண்டுகளாய்
என் நாட்குறிப்பின்
ஒவ்வொரு பக்கத்தையும்
நிரப்பும் அவளின்
ஒரு பக்க கடிதம்

#அவள்



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நலமா என விசாரித்து
நாற்பது நிமிடம்
பேசிச் சென்றவனை
நாள் முழுதும்
சிந்தை கசக்கியும்
யாரென்று தெரியவில்லையே
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠


உழைத்து ஓய்ந்த
உள்ளம் இன்று
மீண்டும்
உழைக்க வேலை
தேடுவதோ

ஹிட்லராய் கர்ஜிக்கும்
மருமகளுக்கும்
புத்தனாய் மௌனிக்கும்
மகனுக்கும்
அஞ்சி அல்ல

மாறுதலான பகலிற்கும்
உழைக்கும்
செல்வம் உணவிற்கும்
களைப்பில் பிறக்கும்
உறக்கத்திற்குமே

#தேடல்



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

ஐம்பது காசளவில்
குங்குமம் சுமந்த நெற்றியும்
முடிந்த கொண்டையில்
மலர்ந்த மல்லியும்
பெரிய மூக்குத்தியின் கீழ்
அளவாய் புன்னகையும்
சுமந்த விசாலாட்சியின்
வண்ணப்  படத்தின் கீழ்

மகன் மகள்கள்
மருமகப்பிள்ளைகள்
பேரன் பேத்திகள்
பெயர்களுடன்
என் பெயரும் அச்சிட்டு
வருந்துவதாக
செய்தி கொடுத்து
கோடை விடுமுறையாம்
கேளிக்கையில் அவர்கள்
பத்திரிக்கையுடன் நான்

#நினைவு



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠


பேரனின் பள்ளி
சுற்றுலாவிற்கு
கொடுத்து வழியனுப்ப
என்னிடம் வெறும்
முத்தங்களே இருந்தன

எப்படி சொல்வேன்
நான் ஆகாஷிடம்
என் ஓய்வூதிய
வங்கி கணக்கட்டை
ரகுநந்தனிடம் உள்ளதென...

#சோதனை


♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

தினசரியை எடுத்து வைத்தவுடன்
அடடே என நினைவுக்கு வர
வீட்டினுள் அதைத்
தேடிச் சென்றேன்
அறையினுள் சென்ற கனமே
வந்த காரணம் மறக்க
எதற்க்கென யோசித்தவாறே
மீண்டும் வாசல் வந்தேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠


மூட்டுக்கு ஒன்று
மூச்சிற்கு ஒன்று
நித்திரை வந்திடவும்
மாத்திரை உண்டு

இடை வலிக்கு ஒன்று
இதயத்திற்க்கொன்று
இரைப்பைக்கு பல வண்ண
மாத்திரைகள் உண்டு
இமியளவு இனிப்புடன்
உப்பில்லா உபசரிப்பு
பத்தியச் சோறும்
சுவையில்லா வாழ்வும்
வயதாகிப்போனாலே
வாடிக்கையாகும்.

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நாற்பது தொலைபேசி எண்களை
மனப்படமாய் சுமந்த மனது
இன்று வீட்டு கதவு இலக்கம்
என்னவென வினவுகிறது

தூரத்து பேருந்திலுள்ள
எழுத்தைப் படித்த கண்கள்
இன்று கையிலுள்ள தாளில்
எழுத்துக்களை அறிய திணறுகிறது
பத்து மையில் தொலைவிலுள்ள
பள்ளி நடந்த கால்கள்
இன்று பத்தடி கடந்து
கழிவறை செல்ல ஆடுகிறது
என் பாட்டன் பேசியதை
சலித்துக் கேட்ட நானோ
என்னுடன் கதை பேச
உறவொன்றை தேடுகிறேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

முதுமை
****************
தியான நிலையில்
நினைவுகளுக்கு 
தூண்டில்

மேடைப் பேச்சாளனும்
குறள் அளவே
குரல் எழுப்ப
இருமலுக்கு இடையே
அளவாய்
வார்த்தைகள்
நடுநிசி தாண்டியும்
தூக்கத்தை விரட்டும்
இரவுகள்
தொலைக்காட்சியும் வானொலியும்
வேறு வழியில்லா
நண்பர்கள்
இணையமும் முகநூலும்
எட்ட முடியா
விந்தைகள்
மருத்துவனும் மருந்துகளும்
பழகிப்போன
அவஸ்தைகள்
இமையடைத்து இந்நாளும்
இறுதி வேண்டி
உறங்குகிறேன்


♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

மகனின் தொழில்வளம்
மருமகளின் மனநிறைவு
பேரப்பிள்ளைகளின் கல்வி
அவர்கள் அனைவரின் உடல்நலம்
வேண்டியே ஜெபிக்கும்
மரியம்மாவின் பிராத்தனைக்கு
கருனை விழியே காட்டுகிறார்
முதியோர் காப்பகத்து கிறிஸ்து.

#பிராத்தனை


♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...